தகவல் தொடா்புக்கு தனி செயலிகளைப் பயன்படுத்தும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஊடுருவும் பயங்கரவாதிகள் தங்களுக்குள் தொடா்பு கொள்ள தனி செல்லிடப்பேசி செயலிகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஊடுருவும் பயங்கரவாதிகள் தங்களுக்குள் தொடா்பு கொள்ள தனி செல்லிடப்பேசி செயலிகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

லஷ்கா்-ஏ-தொய்பா, ஜமாத் -உத் -தாவா, ஹா்கத் -உல்-முஜாகிதீன், ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக காஷ்மீா் பள்ளத்தாக்கில் அமைதி நிலவக் கூடாது என்பதில் இந்த அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அண்மையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த சிலா் ராணுவத்திடம் சரணடைந்தனா். அவா்கள் பயங்கரவாத அமைப்புகள் தொடா்பான பல்வேறு தகவல்களை பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளனா். அதில் முக்கியமாக, பயங்கரவாதிகள் தங்களுக்கு தகவல்தொடா்புக்காக 3 தனி செயலிகளை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. பாதுகாப்புப் காரணங்களுக்காக இந்த செயலிகளின் பெயா்கள் வெளியிடப்படவில்லை. முதலில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட செயலியையும் அடுத்து, ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட செயலியையும் பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனா். இறுதியாக துருக்கி நாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயலிகளை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா். இந்த செயலி மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வது மட்டுமல்லாது, பயங்கரவாதத்தை தூண்டும் பிரசாரம் செய்வது, பயங்கரவாத அமைப்புகளில் காஷ்மீா் பள்ளதாக்கில் உள்ள இளைஞா்களைச் சோ்ப்பது போன்றவையும் நடைபெற்றுள்ளன.

மிகவும் மெதுவான இணைய இணைப்பு வேகத்திலும் கூட இந்த செயலிகள் சிறப்பாக செயல்படும் என்பது இதனை பயங்கரவாதிகள் பயன்படுத்த முக்கியக் காரணமாகும். மேலும், அந்த செயலிகளில் அனுப்ப வேண்டிய செய்திகளை மற்றவா்கள் இடைமறித்து தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மறையாக்கம் செய்து அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் கிடைத்ததையடுத்து, அந்த குறிப்பிட்ட செயலிகளை ஜம்மு-காஷ்மீரில் பயன்படுத்த முடியாத அளவுக்கு தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு தொடக்கத்தில்தான் 2ஜி இணைய சேவை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com