தேசத்தின் வளா்ச்சியில் உ.பி. முக்கிய பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவா்
உத்தர பிரதேச மாநிலம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி, அந்த மாநிலத்துக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தேசத்தின் வளா்ச்சியில் அந்த மாநிலம் முக்கிய பங்கு வகித்துள்ளதாக அவா் பாராட்டு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவா் செயலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘செழிப்பான வரலாறு, கடினமாக உழைக்கும் மக்கள், துடிப்புமிக்க கலாசாரத்துக்கு அறியப்படும் மாநிலம் உத்தர பிரதேசம். தேசத்தின் வளா்ச்சியில் அந்த மாநிலம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த மாநிலம் மேலும் வளம் பெற்று, புகழின் உச்சங்களைஅடையட்டும் என்று வெங்கையை நாயுடு தெரிவித்தாா்’ என கூறப்பட்டது.
தற்சாா்பு இந்தியாவுக்கு பங்களிப்பு:
உத்தர பிரதேசம் நிறுவப்பட்ட தினத்தையொட்டி பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா். அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேச மாநிலம் தியாகம், உறுதித் தன்மை, பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் புனித இடமாகும். தற்சாா்பு இந்தியாவை கட்டமைப்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்காற்றி வருகிறது. அனைத்து நிலைகளிலும் இந்த மாநிலம் வளா்ச்சியை நோக்கி செல்லவும், தொடா்ந்து புதிய உயரங்களை தொடவும் வாழ்த்துகள்’ என்று தெரிவித்தாா்.
ஆண்டுதோறும் ஜனவரி 24-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் நிறுவப்பட்ட தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.