நாட்டின் 72-வது குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, புது தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.
சிறப்பு விருந்தினர்கள் இன்றி புது தில்லி ராஜ்பாத்தில், நாட்டின் 72-வது குடியரசு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் தேசியக் கொடியுடன் வானில் பறந்தது.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.
குடியரசு நாள் விழாவில் இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு, துணை ராணுவப் படை வீரர்கள், தில்லி காவல்துறையினரின் வீரநடை, தேசிய பாதுகாப்புப் படை வீரர்களின் உற்சாக அணிவகுப்பும், எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒட்டக அணிவகுப்பு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுவாக புது தில்லி ராஜபாதையில் 8.50 கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு நடத்தப்படும். ஆனால் இந்த முறை 3.50 கிலோ மீட்டருக்கு மட்டுமே அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக குடியரசு நாள் விழா நிகழ்ச்சிகளை பார்வையிட 4,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.