புது தில்லி: சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளை உடனடியாகக் கலைந்து செல்லுமாறு ஒரு கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், விவசாயிகளைக் கலைக்க காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.
சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கும், அப்பகுதி மக்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் போக்கு உருவான நிலையில், அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
புதிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு, அப்பகுதி மக்கள் என்று கூறிக் கொண்டு ஒரு கும்பல், விவசாயிகளிடம் கூறியது.
இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அந்த கும்பல் விவசாயிகளின் கூடாரங்களை சேதப்படுத்தியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதனால், காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் காவலர்களும் காயமடைந்தனர்.