தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 2,029 குழந்தைகளின் பெற்றோர் பலியாகியுள்ளதாக தில்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லியில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் குறித்த ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கிடைத்த தகவலில்படி, 2,029 குழந்தைகள் தனது ஒரு அல்லது இரு பெற்றோர்களையும் இழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தில்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூறுகையில்,
மொத்தம் 2,029 குழந்தைகள் கரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர். அதில், 67 குழந்தைகள் தாய் மற்றும் தந்தை இருவரையும், 651 குழந்தைகள் தாய், 1,311 குழந்தைகள் தந்தையை இழந்துள்ளனர்.
இந்த தகவல்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு பகிரப்பட்டுள்ளது. இவர்களுக்கு தில்லி அரசு அறிவித்துள்ள நிவாரணங்கள் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், குழந்தைகள் உரிமம் குறித்த புகார்கள் மற்றும் கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் குறித்த தகவல்கள் அளிக்க 9311551393 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட இந்த உதவி எண்ணிற்கு, 3 மாதங்களில் 4,500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
நாடு முழுவதும் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பெருந்தொற்றால் 3.98 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். தில்லியில் மட்டும் 24,971 பேர் பலியாகியுள்ளனர்.