உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் சமாஜவாதி சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடப்போவதாக கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை அறிவித்தார்.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியது:
"சமாஜவாதி சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவுள்ளது. மக்கள் மாற்றத்தை நோக்கி வாக்களிப்பார்கள். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடனே வாக்குறுதிகளை மறந்துவிட்டது. தனது வாக்குறுதிகளை பாஜக குப்பையில் வீசிவிட்டது என்று நினைக்கிறேன்.
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜக தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்தது. இருந்தபோதிலும் அது தோல்வியையே சந்தித்தது. தற்போது அதிகாரத்துக்காக, தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளது. பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி பாஜக தேர்தலைக் கட்டுப்படுத்துகிறது.
வேலைவாய்ப்பின்மை, பண வீக்கம் உள்ளிட்ட நிஜப் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதை பாஜக விரும்புவதில்லை" என்றார் அவர்.