பிகார் மாநிலத்தில் கூடுதலாக தளர்வுகளை அறிவித்து முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக பிகார் மாநிலம் முழுவதும் மே மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின், கரோனா குறைந்ததையடுத்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இன்று முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்ட உத்தரவில்,
மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத வருகையுடன் வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நிலை வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு முன்பு செயல்பட்டது போல், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.