தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
எல்கா் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 84 வயது மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி பார்கின்சன் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. தேசிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்த பின்பு தான் அதற்கான உணவுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவருக்கு ஜாமீன் அளிக்கப்படவில்லை. மும்பை உயர்நீதிமன்ற தலையீட்டுக்கு பின்பு தனியார் மருத்துவமனையில் தாமதமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எல்கா் பரிஷத் விவகாரத்தில் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்து, பொய் வழக்கு போட காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸின் சரத் பாவர், சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் சார்பாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எல்கா் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமை ஆா்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி (84) திங்கள்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.