கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு பொதுமுடக்கத்தை அறிவித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டு பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அசாமில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 7 மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் கோல்பரா, கோலகட், ஜோர்ஹட், லக்ஹிம்பூர், சோனித்பூர், பிஸ்வநாத் மோரிகெளன் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 7ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தின்போது வணிகவளாகங்கள், கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றை முழுவதுமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் மற்றும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.