புது தில்லி: புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் பி.கே. வாரியரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
“டாக்டர் பி.கே. வாரியரின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஆயுர்வேதத்தை பிரபலப்படுத்துவதில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். அன்னாரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவரும், கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை அறக்கட்டளையின் நிர்வாகியுமான பி.கே. வாரியர் இன்று காலமானார். அவருக்கு வயது 100.
கடந்த ஜூன் 8ஆம் தேதி தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடிய பி.கே. வாரியர் கோட்டக்கல்லில் இன்று பகல் 12.30 மணிக்கு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை கோட்டக்கல்லில் உள்ள அவர்களது குடும்ப மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.