கன்னடப் பெயர்களை மாற்றுவது தொடர்பாக கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்திற்கு, கேரள முதல்வர் பிணராயி விஜயன் பதிலளித்துள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் கன்னடப் பெயர்களைக் கொண்டுள்ளது. அதனை மலையாள மொழி பெயர்களாக மாற்ற கேரள அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் 29 ஆம் தேதி, கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து சித்தராமையாவிற்கு, கேரள முதல்வர் அளித்துள்ள பதில் கடிதத்தில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கவலைகொள்ளத் தேவையில்லை.
இரு மாநில மக்களின் ஒற்றுமை குறித்து உங்களது எண்ணங்களை வரவேற்கிறோம். தற்போது கரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொலைக்காட்சி வழியாக கன்னட வழி வகுப்புகளைத் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.