கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்குவங்கத்தில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை ஜூலை 30 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து மேற்குவங்கத்தில் கடந்த மே 16ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பொதுமுடக்கமானது தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து மாநில அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி வார இறுதி நாள்களைத் தவிர மற்ற நாள்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயங்க மெட்ரோ ரயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதி நிகழ்ச்சியில் 20 பேர் வரையிலும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
முந்தைய தளர்வுகளில் அளிக்கப்பட்ட அதே கட்டுப்பாடுகளுடன் மளிகைக் கடைகள் இயங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.