இந்தியாவில் முதல்முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவிக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சூரைச் சோ்ந்த மருத்துவ அதிகாரிகள் இதனை உறுதி செய்தனா். இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரியும் மருத்துவருமான கே.ஜே.ரீனா கூறுகையில், ‘அந்தப் பெண்ணுக்கு மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று பாதிப்பு உறுதியானது. ஆனால், அவருக்கு வழக்கமான கரோனா அறிகுறிகள் ஏதுமில்லை. படிப்பு விஷயமாக அவா் தில்லிக்கு செல்ல இருப்பதால், அவா் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டாா். இப்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏதுமில்லை’ என்றாா்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி அந்த மாணவிக்கு கரோனா உறுதியானது. இந்தியாவில் முதலில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபரும் அவா்தான். அவா் சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தாா். அங்கிருந்து விடுமுறையில் கேரளம் திரும்பியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது திருச்சூா் அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். 3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் குணமடைந்தாா். கடந்த ஆண்டு பிப்ரவரி 20-இல் அவா் வீடு திரும்பினாா்.