வரதட்சிணை வாங்குவது, கொடுப்பது தவறு என்பதை வலியுறுத்தி கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உண்ணாவிரதப் போராட்டத்தல் ஈடுபட்டு வருகிறார்.
வரதட்சிணை வாங்குவதும், கொடுப்பதும் தவறு என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். காலை 8 மணி முதல் 4.30 வரை ராஜ் பவனில் உண்ணாவிரதம் இருக்கும் அவர், 4.30 முதல் 6 மணி வரை காந்தி பவனில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
முன்னதாக நேற்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ''கேரளாவில் வரதட்சிணைக் கொடுமையால் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது வரதட்சிணைக் கொடுமை அதிகரித்து வருவதை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுவது போல் அமைந்துள்ளது. நமது மாநிலத்திற்கு தரக்குறைவை ஏற்படுத்தும் விதமாக இந்த சம்பவம் நிகழ்த்துள்ளது. ஒரு இளைஞன் வரதட்சிணை வாங்கி திருமணம் செய்தால், அவன் கற்ற கல்விக்கும், நமது நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறார் என்றும், பெண் இனத்திற்கு கலங்கம் விளைவிக்கிறார் என்றும் மகாத்மா காந்தி தெரிவிக்கிறார்.
வரதட்சிணை சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக பெண்களுக்கு உதவுவதற்கு ஸ்ரீ ஸ்த்ரீபக்சா கேரளம் என்ற திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. வரதட்சிணை பெறுவதும் அளிப்பதும் தண்டனைக்குரிய குற்றம். இதன் காரணமாக 5 வருடங்கள் வரை ஒருவருக்கு சிறை தண்டனை அளிக்க முடியும். மேலும் இது கேரளவின் வளர்ச்சிக்கு உதவும் பெண்களின் கௌரவத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகும்.
இளைய தலைமுறையினர் வரதட்சிணை வேண்டாம் என உரக்கச் சொல்ல வேண்டும். வரதட்சிணை குறித்தான விழிப்புணர்வு, பாலின சமநிலை, சமூக நீதி ஆகியவை முழுமையாக நடைமுறைக்கு வர, நாம் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது'' என்றார்.