கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிகார், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை கன்வர் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பெருந்தொற்று பரவிவரும் நிலையில், இந்த யாத்திரையை உத்தரகண்ட் அரசு ரத்து செய்தது.
இருப்பினும், ஜூலை 25ஆம் தேதி முதல் யாத்திரையை நடத்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில், யாத்திரைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தை தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு எடுத்து கொண்டது.
அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எப். நரிமன் தலைமையிலான அமர்வு, உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இவ்வழக்கை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.