குஜராத்தில் வேறு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, ஓடிப்போக முயன்ற மனைவியை ஊரார் முன் நிர்வாணமாக்கி தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தில் தன்பூர் ஊராட்சியில் உள்ள காஜூரி என்ற பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவன் உள்ளிட்ட ஊர் மக்களைச் சேர்ந்த சில ஆண்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார். பெண்கள் குழந்தைகள் அனைவரும் சூழ்ந்திருக்க இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த ஜூலை 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் விடியோவாக இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த விடியோவில் அங்கிருந்த பெண்கள் அனைவரும் உடைகள் வழங்கி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உதவ முன் வருகின்றனர். ஆனால் பெண்ணின் கணவர் அவர்களைத் தடுத்து விடுகிறார்.
இந்த விடியோவின் அடிப்படையில் தான்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரையும், அவருடன் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்துள்ளனர். காவல் துறையினரின் விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணும், அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் இணைந்து வாழ முடிவு செய்து கிராமத்தை விட்டு செல்ல முயன்றுள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்ட அவரது கணவரும், அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும் இருவரையும் மடக்கிப் பிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
பின்பு அந்த பெண்ணை தண்டிக்கும் விதமாக அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். பெண்ணை அவமானப்படுத்தியது, அவரை தாக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.