வாராணசியில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் ரூ. 1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.
பழமை வாய்ந்த நகரமான காசியின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு மையத்தின் கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.
சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு மையத்தின் கூரை சிவ லிங்கத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி 108 ருத்ராக்ஷம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் கூறுகின்றனர். சிக்ரா பகுதியில் 2.87 ஹெக்டேர் நிலத்தில் 1,200 இருக்கை வசதிகளுடன் இரண்டு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மாநாடுகளை நடத்தி சமூக கலாசாரங்கள் குறித்த உரையாடலை நடத்துவதற்கு இந்த மையம் வாய்ப்பளிக்கும் என அலுவலர்கள் கூறுகின்றனர். நகரில் சுற்றுலா துறையை மேம்படுத்த இது உதவும் எனவும் அலுவலர்கள் கூறுகின்றனர்.