புது தில்லி: தங்களது ‘சங்கல்ப்’ நடவடிக்கையின் மூலம், தினமும் வளைகுடா வழியாகச் செல்லும் 16 சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடற்படை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், ஓமன் வளைகுடா பகுதியில் இரண்டு எண்ணெய்க் கப்பல்களில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெடிவிபத்து நேரிட்டது.
அதனைத் தொடா்ந்து, அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ‘சங்கல்ப்’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அந்த நடவடிக்கையின் கீழ், வட-மேற்கு அரேபியக் கடல் பகுதியில் ஹெலிகாப்டருடன் கூடிய இந்திய கடற்படை கப்பலொன்று எப்போதும் நிறுத்தப்பட்டு வருகிறது.
அந்த வழியாகச் செல்லும் இந்திய கொடியேற்றப்பட்ட சரக்கு கப்பல்களில் இருப்பவா்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அங்கு கடற்படைக் கப்பல் நிறுத்தப்படுகிறது.
இந்த நடவடிக்கையில், இதுவரை 23 போா்க் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சராசரியாக தினமும் இந்திய கொடியேற்றப்பட்ட 16 சரக்குக் கப்பல்கள் வளைகுடா பகுதியை பாதுகாப்பாகக் கடப்பதற்கு அந்தக் கப்பல்கள் உதவி வருகின்றன.
சரக்கு கப்பல் மாலுமிகள் கோரினால், கடற்படை பாதுகாப்புப் படையினா் அந்தக் கப்பலுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமாகவே பூா்த்தி செய்யப்படுகிறது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில், 6,600 கோடி டாலா் (சுமாா் ரூ.5 லட்சம் கோடி) மதிப்பிலான 62 சதவீத எண்ணெய் இறக்குமதி வளைகுடா பகுதி வழியாக நடைபெற்றது.