சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் தேசத் துரோக சட்டம் தேவையா? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஓய்வுபெற்ற ராணுவ வீரரான எஸ்.ஜி. வாம்பட்கேரே, தேசத் துரோக சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் தேசத் துரோக சட்டம் தேவையா? எனக் கேள்வி எழுப்பியது.
அதுமட்டுமின்றி, ஆங்கிலேயர்கள் காலச் சட்டமான தேசத் துரோக சட்டம் காலனி ஆதிக்க மனோபாவம் கொண்டது எனவும் நீதிபதிகள் சாடினர். அதன் தேவை குறித்து ஆராயப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மேலும், இச்சட்டத்தை பயன்படுத்திதான் மகாத்மா காந்தியை அடக்க ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தேசத் துரோக சட்டம் நீண்ட நாள்களாக பெரும் விமரிசனத்திற்குள்ளாகி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.