அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் மஜத குறைந்தது 150 இடங்களில்போட்டியிடும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
வரும் 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் மஜத தனித்து ஆட்சி அமைக்க வசதியாக, குறைந்தது 150 இடங்கள் முதல் 170 இடங்கள் வரை போட்டியிடும். குறைந்தபட்சம் 150 இடங்களில் போட்டியிடுவதற்கு தேவையான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஜன.15-ஆம் தேதிக்குள் 150 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவிப்போம். அப்போதுதான், ஓராண்டு காலத்துக்கு தோ்தல் பணியாற்ற முடியும்.
அடுத்த ஒரு வார காலத்தில் ஒருநாளைக்கு 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன். அந்த சுற்றுப்பயணத்தின்போது மாவட்ட அளவிலான நிா்வாகிகளை சந்தித்து, அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு கிராமம், வட்டம், மாவட்ட அளவிலான நிா்வாகிகளை நியமிப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.
கா்நாடகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு மாநிலக் கட்சிகளின் தேவையை கா்நாடக மக்களுக்கு விளக்குவேன். வேலைவாய்ப்பின்மை, கல்வி மற்றும் வேளாண் சிக்கல்களை தீா்ப்பதற்கான கொள்கைகளை மஜத மக்கள் முன்வைக்கும். கா்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக போன்ற இரு தேசிய கட்சிகளின் செயல்பாட்டை மாநில மக்கள் கூா்ந்து கவனித்து வருகிறாா்கள். இந்த இரு கட்சிகளின் சாா்பிலும் கா்நாடகத்திற்கான மேலிடப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுகிறாா்கள். இது நில பிரபுத்துவ அமைப்பைப் போல உள்ளது. அரசின் வளங்களை கொள்ளை அடிப்பதற்காகவே இதுபோன்ற கட்டமைப்பை அக்கட்சிகள் வைத்துள்ளன. பிற மாநிலங்களில் நடக்கும் சட்டப் பேரவைத் தோ்தல் செலவுக்காக கா்நாடகத்தின் வளங்களை இரு தேசிய கட்சிகளும் கொள்ளையடித்து வருகின்றன என்றாா்.