ஆந்திரத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு இருகால்களையும் இழந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நுலகபேட்டாவைச் சேர்ந்தவர் பிரித்வி(20). இவர் தற்கொலை செய்துகொள்ள எண்ணி ரயில்வே தண்டவாளத்தில் படுத்திருக்கிறார். அப்போது திலக் எக்ஸ்பிரஸ், ரயில் எண் -17222-ஆனது மும்பையில் இருந்து விஜயவாடா நோக்கி வந்துகொண்டிருந்தது. ரயிலை இயக்கிய ஹனுமந்த் ராவ் மற்றும் அவரது உதவியாளர் ரகுராம் ராஜூ ஆகியோர் 100மீ தொலைவில் பிரித்வி தண்டவாளத்தில் படுத்திருப்பதை பார்த்திருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக எமர்ஜென்சி பிரேக்கை பிடித்திருக்கின்றனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக பிரித்வியின் காலில் ரயில் ஏறியிருக்கிறது. இந்த விபத்தில் அவரின் கால் இரண்டு துண்டாகியிருக்கிறது. இதனையடுத்து ரயிலில் இருந்து இறங்கிய ஹனுமந்த் ராவ் மற்றும் ரகுராம் ராஜூ ஆகியோர் பிரித்வியை தண்டவாளத்தில் இருந்து வெளியில் எடுத்திருக்கின்றனர். பின்னர் பிரித்வியின் கால்களை பிளாஸ்டிக் கவரில் போட்டுள்ளனர். இருவரும் பிரித்வியை ரயிலில் ஏற்றி விஜயவாடா ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளனர். அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அவசர ஊர்தியுடன் நின்றுகொண்டுள்ளனர்.
பின்னர் பிரித்வி அவசர ஊர்தி மூலம் விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இரண்டு கால்களையும் இணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவரது காலில் பல்வேறு இடங்களில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவர்களால் காலை இணைக்க முடியவில்லை. பிரித்வி எந்த காரணத்துக்காக தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எந்த பிரச்னைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் உடனடியாக 7893078930 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.