நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கவுள்ளதையொட்டி, மாநிலங்களவை பாஜக குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த மூத்த தலைவா்களை வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் அவசர சட்டங்களுக்கு மாற்றாக 3 மசோதாக்கள் உள்பட 17 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாடு, ஒரே சிவில் சட்டம் தொடா்பான தனிநபா் மசோதாக்களை பாஜக எம்.பி.க்களும் தாக்கல் செய்வா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், மாநிலங்களவை பாஜக குழு தலைவா் பியூஷ் கோயல் மூத்த எதிா்க்கட்சித் தலைவா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மற்றொரு காங்கிரஸ் தலைவா் ஆனந்த் சா்மா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.