ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் பாலியல் வன்கொடுமைக் குற்றத்தின் கீழ்தான் வரும் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் குற்றம்சாட்ட ஒருவருக்கு மாவட்ட நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த பெண்ணுடன் உடல்ரீதியாக தான் எவ்வித உறவும் கொள்ளவில்லை என்று தனது தரப்பின் வாதமாக அவர் முன்வைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாலியல் ரீதியாக குற்றம்சாட்டப்பட்டவர் துன்புறுத்தியதற்கான தடயவியல் ஆதாரம் உள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் அணிந்திருந்த துணியில் உள்ள மணலும், குற்றம் நடந்த இடத்தில் உள்ள மணலும் ஒன்றாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண், குற்றம்சாட்டப்பட்ட நபரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது. இருவருக்கும் இடையில் உடலுறவு நடைபெறவில்லையென்றாலும், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதால், அது சட்டப்படி குற்றமாகும். இது இந்திய சட்டப் பிரிவு 376-ன் படி இந்த குற்றமும் பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுகிறது என்று கூறி அவருடைய மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.