அரசியல் லாபத்திற்காக ஊரடங்கை பயன்படுத்த வேண்டாம் என பாஜக தலைவர் வி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே கேரள மாநிலத்தில்தான் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இங்கு தினமும் 10ஆயிரத்தும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி கேரள மாநிலத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 18, 19, 20 ஆகிய மூன்று நாள்கள் அத்தியாவசியப் பொருள்கள் அல்லாத மற்ற பொருள்களை விற்கும் கடைகள் இரவு 8 மணி வரை இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கேரள அரசின் புதிய தளர்வுக்கு அம்மாநில பாஜக தலைவர் வி.முரளீதரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பக்ரீத்துக்காக ஊரடங்கில் 3 நாள்கள் அரசு விலக்கு அளித்துள்ளது.
ஆனால் இவ்விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்பதே எனது பரிந்துரை. அரசியல் லாபத்திற்காக ஊரடங்கை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். வரும் 21ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.