பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானதற்கு அமரீந்தர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஹரிஸ் ராவத் அவரை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு நிலவிவந்தது. அமரீந்தரின் நடவடிக்கைகளை சித்து வெளிப்படையாகவே எதிர்த்து பேசி விமரிசித்து வந்தார்.
அமைச்சர் பதவியிலிருந்து சித்து விலகிய நிலையில் அவர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், சித்துவை தலைவராக நியமிக்க அமரீந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும், இதுகுறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதியதாகவும் தகவல் வெளியானது.
பரபரப்பான அரசியல் சூழல் நிலவிவரும் நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் ராவத் அமரீந்தரை சந்திக்க சண்டீகர் சென்றுள்ளார்.
பல ஆண்டுகளாக நீடிதது வந்த அதிகார போட்டியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும் இருவரையும் சமாதானம் செய்யும் வகையிலேயே காங்கிரஸ் தலைமை சித்துவை தலைவராக்க முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவின்படி, சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் பஞ்சாபில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரையும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரையும் செயல் தலைவர்களாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் கட்சியின் பரப்புரைக் குழு தலைவராக முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை நியமிக்கவும் திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.