வட கிழக்கு மாநிலங்களில் டெல்டா வகை கரோனா பரவிவரும் நிலையில் அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் டெல்டா வகை கரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்களில் கரோனா தாக்கம் குறைந்திருந்தாலும் டெல்டா வகையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் அடுத்த பத்து நாட்களுக்கும் மிசோரமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் 24ஆம் தேதி வரையும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் சனி மற்றும் ஞாயிறுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைநகர் அகர்தாலா மற்றும் 11 நகராட்சி அமைப்புகளின் கீழ் வரும் பகுதிகளில் ஜூலை 19 முதல் 23 வரை காலை நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது.
சிக்கிமில் கரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையின்போது 155 சதவிகிதம் கூடுதலாகப் பரவியது. எனவே, அடுத்த 30 நாட்களுக்கு மதம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகளை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.