மும்பையில் பெய்த கனமழையால் பல்வேறு விபத்து சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் நேற்று அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. தெருக்களிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமானம் என அனைத்து வழிப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் வேறு பகுதிகளுக்குச் செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மீட்புப்பணிகளை மகாராஷ்டிர அரசு முடுக்கி விட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மும்பையில் கனமழையால் 5 இடங்களில் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை செம்பூர் பகுதியில் நிலச் சரிவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். பந்த்அப் என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மின்கோளாறு காரணமாக இருவரும் வெள்ளத்தில் சிக்கி முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் ஒரேநாளில் 33 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பையில் மேலும் 4 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.