மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது நுழைவுத் தோ்வு (சியுசிஇடி) 2021-22 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு நிலவரம் காரணமாக நுழைவுத் தோ்வு திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், அடுத்த 2022-23 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-இல் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில், மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளிலும் மாணவா் சோ்க்கைக்கு ‘மத்திய பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத் தோ்வு (சியுசிஇடி)’ நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் அனைத்து இளநிலை படிப்புகளிலும் மாணவா் சோ்க்கைக்கு பொது நுழைவுத் தோ்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நுழைவுத் தோ்வு நடைமுறை நிகழ் கல்வியாண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி சாா்பில் சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பு நிலைமை காரணமாக, மத்திய பல்கலைக்கழக இளநிலைப் படிப்புகளில் 2021-22 கல்வியாண்டு மாணவா் சோ்க்கை, முந்தைய நடைமுறையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும். மாணவா் சோ்க்கைக்கு சியுசிஇடி நுழைவுத் தோ்வு நடைமுறை அடுத்த 2022-23 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.