ஆக்ரா : சரோஜினி நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருப்புப் பூஞ்சை நோயாளிகள் தொற்றில் இருந்து மீண்ட பிறகும் அதே தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றுக்கு அடுத்தபடியாக கருப்புப் பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கான உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு தொற்று உறுதியானவர்களை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் ஆக்ராவின் மாவட்ட கருப்புப் பூஞ்சை கண்காணிப்பாளர் அகில் பிரதாப் சிங் ' இதுவரை ஆக்ராவில் 83 பேர் கருப்புப் பூஞ்சை தொற்றில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் மீதம் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் குணமடைந்தவர்களை 15 நாட்களுக்கு பின் பரிசோதனை செய்த போது அதில் 9 பேருக்கு அதே தொற்று மீண்டும் கண்டறியப்பட்டிருக்கிறது . 9 பேரும் 40 வயதைக் கடந்தவர்கள் எனவும் இதற்கு முன் இவர்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்றுக்கும் ஆளானவர்கள் ' என்கிற தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
பாதிப்படைந்தவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதால் முன் எச்சரிக்கையாக சிகிச்சை வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஆக்ராவில் இரண்டு புதிய நோயாளிகளுக்கு கருப்புப் பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது .