கரோனா இரண்டாம் அலை பாதிப்பின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை என தில்லி துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானவர்களின் விவரங்களை மாநில அரசுகள் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, "ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் குறித்த உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பிறகு அதனைக் குறித்து விசாரிக்க தில்லி அரசு குழு அமைத்தது. எனினும் அவ்வாறு அமைக்கப்பட்ட குழுவிற்கு மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “மத்திய அரசு அனுமதியளிக்காததால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டார்.
"எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் அனைத்து மாநில அரசுகளின் அன்றாட செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுகிறது. இது தேவையற்றது. மாநிலங்களின் விஷயங்களில் மத்திய அரசு தலையிட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் தெரிவித்தார்.