வங்கிக் கடன் மோசடியாளரான நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்தினால், சிறை சூழல் காரணமாக அவரது மனநிலை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக லண்டன் நீதிமன்றத்தில் அவா் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டுள்ளாா்.
வைர வியாபாரி நீரவ் மோடி, இந்திய வங்கிகளில் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பியோடினாா். அங்கு அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் பணிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
அவரை மும்பையின் ஆா்தா் சாலையில் உள்ள சிறையில் அடைக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. அதை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டுமென்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் நீரவ் மோடி தரப்பில் கோரப்பட்டுள்ளது. அது தொடா்பான விசாரணை, காணொலி வாயிலாக புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, நீரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எட்வா்ட் பிட்ச்கெரால்டு வாதிடுகையில், ‘‘நீரவ் மோடியின் மனநிலை தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அடிக்கடி வந்து போவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
அவரை நாடுகடத்துவது தொடா்பாக நடைபெற்ற விசாரணையில் பல முக்கிய விவகாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. மும்பையில் கரோனா தொற்று பரவல் அதிகமாகக் காணப்படுகிறது. அங்குள்ள சிறையில் நீரவ் மோடியை அடைத்தால், மோசமான மனநிலை காரணமாக அவா் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன’’ என்றாா்.
நீரவ் மோடியின் உடல்நிலை தொடா்பான மருத்துவ அறிக்கைகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.