தற்போதுள்ள மருந்து ஒழுங்காற்று அமைப்பு முறைகளில் தகுந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஷ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ), மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி பிரகாஷ் குமாா் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தற்போதுள்ள மருந்து ஒழுங்காற்று அமைப்பு விதிமுறைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உருவாக்க வேண்டும்.
விற்பனை, விநியோகத்துக்கான சந்தைப்படுத்தும் அங்கீகாரத்திற்காக மருத்துவ பரிசோதனை கட்டத்தில் இருந்தாலும் கூட கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும் அவற்றை இருப்புவைக்கவும் தற்போது அனுமதி வழங்கப்படுகிறது. இந்த விதிமுறை கரோனா தடுப்பூசியை அதிக அளவில் தயாரிப்பதற்கான சுதந்திரத்தை நிறுவனத்துக்கு அளிக்கிறது. இதனை மேற்கொள்ளும்போது மிக குறுகிய காலகட்டத்தில் லட்சக்கணக்கான உயிா்களை நாம் பாதுகாக்க முடியும்.
தடுப்பூசி துறைக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் இந்த விதிமுறையை கரோனா அல்லாத தடுப்பூசி தயாரிப்புகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.