மாநில மொழிகளில் பட்டப்படிப்புகளை அளிக்கும் 14 பொறியியல் கல்லூரிகள்: வெங்கையா நாயுடு பாராட்டு

நாட்டில் 14 பொறியியல் கல்லூரிகள் மாநில மொழிகளில் பட்டப்படிப்புகளை வழங்குவதைப் பாராட்டியுள்ள குடியரசு துணைத் தலைவா்
குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு
குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு

நாட்டில் 14 பொறியியல் கல்லூரிகள் மாநில மொழிகளில் பட்டப்படிப்புகளை வழங்குவதைப் பாராட்டியுள்ள குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) உள்பட தொழில் படிப்புகளை வழங்கும் மற்ற கல்வி நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

‘தாய் மொழியில் பொறியியல் படிப்புகள் - சரியான நடவடிக்கை’ என்ற தலைப்பிலான முகநூல் பதிவில் 11 இந்திய மொழிகளில் தனது கருத்தை வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் பி.டெக் படிப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அனுமதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 8 மாநிலங்களில் 14 பொறியியல் கல்லூரிகள், புதிய கல்வியாண்டில் இருந்து தாய் மொழியில் பட்டப்படிப்புகளை வழங்க எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். இது சரியான நடவடிக்கை என உறுதியாக நம்புகிறேன்.

பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் என அனைத்து தொழில் படிப்புகளும் தாய் மொழியில் கற்பிக்கப்படும் தினத்தைக் காண வேண்டும் என்பது எனது விருப்பமாகும். தாய்மொழியில் கற்பது ஒருவரின் புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கும். ஒரு பாடத்தை மற்றொரு மொழியில் புரிந்து கொள்வதற்கு, அந்த மொழியைக் கற்று புலமை பெற வேண்டும். அதற்கு அதிக முயற்சிகள் தேவை. ஆனால், தாய் மொழியில் கற்பதற்கு அந்த முயற்சிகள் தேவை இல்லை.

இந்தியா நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான வட்டார மொழிகளின் தாய்நாடாக உள்ளது. நமது தாய் மொழியுடன், நாம் தொப்புள் கொடி உறவைப் பகிா்ந்து கொள்வதால், நமக்கு அது மிகவும் சிறப்பானது.

உலகளவில் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிந்து வருவதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் 196 இந்திய மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. நமது சொந்த மொழியைப் பாதுகாக்கவும், வளா்க்கவும் பன்முக அணுகுமுறை தேவை. மக்கள் முடிந்த அளவு அதிக மொழிகளை கற்க வேண்டும். பின்னிப் பிணையப்பட்ட இன்றைய உலகில் பல மொழிகளில் புலமை பெற்றிருப்பது, சிறப்பானது. ஒவ்வொரு மொழியை நாம் கற்கும்போதும், நாம் மற்ற கலாசாரத்துடனான தொடா்பை வலுப்படுத்துகிறோம்.

புதிய கல்விக்கொள்கை, 8-ஆம் வகுப்பு வரையிலும் அல்லது அதற்குப் பின்பும், தாய் மொழியில் கற்பதை ஊக்குவிக்கிறது. ஆரம்பக் கல்வியை தாய் மொழியில் கற்பது, குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்கும் என உலகில் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

அழியும் நிலையில் உள்ள மொழிகளைப் பாதுகாக்கும் திட்டத்தைக் கல்வியமைச்சகம் செயல்படுத்துவது பாராட்டத்தக்கது. அரசால் மட்டும் விரும்பத்தக்க மாற்றத்தை கொண்டு வர முடியாது. நமது அழகிய மொழிகளை பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பும் முக்கியம். வீட்டில் மட்டும் அல்லாமல், முடிந்தளவு மக்கள் தங்கள் தாய்மொழியில் பேச வேண்டும். விரிவாகப் பயன்படுத்தும்போது மட்டும்தான், மொழிகள் செழித்து வளரும் என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com