பொதுத் துறை வங்கிகளால் 13.06 லட்சம் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) கடன்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எம்எஸ்எம்இ துறை அமைச்சா் நாராயண் ராணே மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியுள்ளதாவது:
நடப்பாண்டு ஜூன் 25 வரையிலான நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளால் 13.06 லட்சம் எம்எஸ்எம்இ கடன் கணக்குகள் மறுசீரமைப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.55,333 கோடி. அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ஜூலை 2 நிலவரப்படி ரூ.2.73 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ராணே கூறியுள்ளாா்.
13,327 கி.மீ. நெடுஞ்சாலை: கடந்த 2020-21 நிதியாண்டில் 13,327 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு 2021-22 நிதியாண்டுக்குள் 12,000 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருவதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் வியாழக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.