அருணாச்சலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100% இலக்கை எட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் நேரடியாக மக்கள் இருக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் பெமா காண்டு வியாழக்கிழமை மாவட்ட நிர்வாகங்களுடனான காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது, 'மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லது வாக்காளர் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து எண்ணிக்கையை கணக்கிலகொள்ள வேண்டும். இவற்றைக் காட்டிலும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் மக்கள்தொகையில் பகுதியினர் அந்தந்த மாவட்டங்களின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை கொண்டிருந்து வேறு மாவட்டங்களில் வசிக்கலாம். இட்டாநகரில் 100% தடுப்பூசி போடப்பட்டுள்ள அதேநிலையில் கிரா-தாதா போன்ற மாவட்டங்களில் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் தடுப்பூசி போட்டுள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15க்குள் 100% தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார்.
அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை 7,91,371 தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, இதில் முதல் தவணை 6,42,785, இரண்டாவது தவணை 1,48,586 என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில மக்கள் தொகை சுமார் 12.6 லட்சம்.
மாநிலத்தில் தற்போது 4,384 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 39,634 பேர் குணமடைந்துள்ள நிலையில் 204 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.