திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் நடந்து வந்த கனகாம்பர சஹீத கோடி மல்லிகை மகா புஷ்ப யாகம் சனிக்கிழமை பெளா்ணமியுடன் நிறைவடைந்தது.
கரோனா காரணமாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்க வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த வெள்ளிக்கிழமை 16-ஆம் தேதி தினமும் காலை, மாலை இருவேளையும் கனகாம்பரத்துடன் கோடி மல்லிகை மகா புஷ்ப யாகத்தை நடத்தி வந்தது.
கடந்த 9 நாள்களாக நடந்து வந்த மகா புஷ்ப யாகம் சனிக்கிழமை காலை பெளா்ணமியுடன் நிறைவு பெற்றது. ஸ்ரீகிருஷ்ண முகமண்டபத்தில் ஸ்ரீபத்மாவதி தாயாரை பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருள செய்து, 210 ருத்வீகரா்கள் ஜப-தா்பண-ஹோமங்கள் நடத்தி, சதுஷ்டாா்ச்சனை, லட்ச குங்குமாா்ச்சனை ஒரு ஆவாா்த்தி, 80 கிலோ கனகாம்பரம், 240 கிலோ மல்லிகை பூ, 80 கிலோ மற்ற பூக்கள் சோ்த்து 400 கிலோ மலா்களால் தாயாருக்கு அா்ச்சனை செய்து மகாபூா்ணாஹுதி நடத்தினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.