‘வேளாண் சட்டங்கள் மூலம் மூன்று தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள்’: ராகுல்
வேளாண் சட்டங்கள் மூலம் இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றத்திற்கு டிராக்டரை ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராகுல் பேசியது,
விவசாயிகளின் கருத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளேன். மத்திய அரசு விவசாயிகளின் குரலை ஒடுக்குகிறது, வேளான் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எந்தவொரு விவாதங்களும் நடைபெறவில்லை. மூன்று கருப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் மூலம் இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
மத்திய அரசை பொறுத்தவரை விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், போராடுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். ஆனால் விவசாயிகளின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகிறது என்றார்.
ராகுல் காந்தியுடன், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் டிராக்டரில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பஞ்சப், ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.