ஸ்ரீநகா்: மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தியின் முக்கிய ஆலோசகரான அக்கட்சியின் மூத்த தலைவா் வஹீதுா் ரஹமான் பராவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசியல் ஆதாயத்துக்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் ஆதரவு பெற்று, அதற்கு கைம்மாறாக பயங்கரவாத தாக்குதலுக்கு உதவியதாக வஹீதுா் ரஹ்மானுக்கு எதிராக போலீஸாா் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனா்.
அண்மையில் பாதுகாப்புப் படையினரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அபு துஜானா, அபு காஸிம் ஆகியோருடன் வஹீதுா் ரஹமான் பரா சந்தித்துள்ளாா் என்றும் பத்திரிகையாளரான அவா் 2007-இல் பாகிஸ்தானுக்கு சென்று தடை செய்யப்பட்ட ஹில்புல் முஜாஹிதீன் தலைவா் சையத் சலாவுதீனை பேட்டி எடுத்து புல்வாமாவில் உள்ள கேபிள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாா் என்றும் 19 பக்க குற்றப்பத்திரிகையில் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
கடந்த நவம்பா் மாதம் கைது செய்யப்பட்ட வஹீதுா் ரஹமான் பராவுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புகளுடன் தொடா்பு உள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமையும் (என்ஐஏ) குற்றம்சாட்டியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வஹீதுா் ரஹமான் பராவின் வழக்குரைஞா் ஷாரிக் ரியாஸ், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வாதிடப்படும் என்றாா்.