திருநங்கைகள் பல பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்: மத்திய அரசு
திருநங்கைகள் இன்றும் பல பாகுபாடுகளை எதிர்கொள்வதாக நாடாளுமன்றத்தில் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்து பேசிய அமைச்சகம்,
திருநங்கைகளில் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், திருநங்கை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019 இயற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது.
இதன் மூலம் திருநங்கைகளுக்கான அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டது.
திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலை சேர்ந்த ஒருவர் அரசுத் திட்டங்களில் திருநங்கைகளுக்கான தேவைகள் குறித்து ஆலோசனை வழங்க தனியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அரசுத் திட்டங்கள், புதிய விதிமுறைகள், நிகழ்ச்சிகள், சட்டம் போன்றவற்றில் ஆலோசனைகள் பெறப்பட்டு அவை பரிசீலனை செய்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அரசு இணையதளம் மூலம் திருநங்கைகள், சமூகத்தில் தங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதுவரை 3,77,565 திருநங்கைகள் இந்த இணையப் பக்கத்தை பார்வையிட்டுள்ளனர். 2,800 பேர் திருநங்கை அடையாள அட்டை பெற்று பயனடைந்துள்ளனர்.
திருநங்கைகளுக்கு உதவும் வகையில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இருப்பிடங்கள் அமைத்துக்கொள்ள அரசு உதவுகிறது.
மகாராஷ்டிரம், ஒடிஸா, தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், சத்தீஸ்கர், தமிழகம் ஆகிய மாநிலங்களில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தது.