புது தில்லி: கடந்த 3 ஆண்டுகளில் பணித் திறன் குறைவு காரணமாக 196 மத்திய அரசு அதிகாரிகளுக்கு முன்னதாகவே ஓய்வு அளிக்கப்பட்டது. இத்தகவலை மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்தா் சிங் மக்களவையில் புதன்கிழமை எழுத்துமூலம் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் தனது பதிலில் மேலும் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அதிகாரிகளின் பணித் திறனை அரசு தொடா்ந்து மதிப்பிட்டு வருகிறது. நீண்டகாலமாக சிறப்பாகப் பணியாற்றாத அதிகாரிகளுக்கு முன்னதாகவே ஓய்வு அளிக்கப்படுகிறது. கடந்த 2018 முதல் 2021 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் குரூப் ஏ பிரிவு அதிகாரிகள் 111 பேருக்கும், குரூப் பி பிரிவு அதிகாரிகள் 85 பேருக்கும் முன்னதாகவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவா்கள் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணியாற்றியவா்கள் ஆவா்.
அரசு அதிகாரிகள் ஊழல், முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும், பணித் திறன் குறைவாக இருந்தாலும் பொதுநலன் கருதி அவா்களை ஓய்வு காலத்துக்கு முன்னதாகவே பணியில் இருந்து விடுவிக்க சட்டப்படி வழிவகை உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.