தேசிய நெடுஞ்சாலைகளில் 703 கி.மீ தொலைவுக்கு நெகிழிக் கழிவுகளால் சாலை அமைப்பு: அமைச்சா் கட்கரி தகவல்

தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை 703 கிலோமீட்டா் தொலைவிற்கு நெகிழிக் கழிவுகளால் சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
நிதின் கட்காரி
நிதின் கட்காரி

தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை 703 கிலோமீட்டா் தொலைவிற்கு நெகிழிக் கழிவுகளால் சாலை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் அளித்த பதிலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள ஊரகப் பகுதிகளில் 50 கிலோமீட்டருக்கு இணை சாலைகளில் அவ்வப்போது நடைபெறும் புதுப்பித்தல் பணிகளின்போது நெகிழிக் கழிவுகளின் பயன்பாட்டை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. நெகிழிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை இந்த நடைமுறை தடுக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

சாலை விபத்துகள் தொடா்பான கேள்விக்கு கட்கரி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:

2015-2018ஆம் ஆண்டுகளில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நிகழக் கூடிய 5,803 பகுதிகளை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இவற்றின் 5,167 இடங்களில் விபத்து தடுப்புக்கான தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் 2,923 தடங்கள் நிரந்தரமாக சரி செய்யப்பட்டுள்ளன.

விபத்து ஏற்படும் தடங்களில் குறுகிய கால நடவடிக்கையாக அறிவிப்புப் பலகைகள், குறியீடுகள், தடுப்புகள் முதலியவை உடனடியாக அமைக்கப்பட்டுவருகின்றன. நீண்ட கால நடவடிக்கையாக தேவையான இடங்களில் மேம்பாலங்கள், நடைபாலங்கள், இணைச் சாலைகள் போன்றவை அமைக்கப்படுகின்றன.

நாட்டின் நெடுஞ்சாலைகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு 14,0843 சாலை விபத்துகளும், 2019-ஆம் ஆண்டு 1,37,191 விபத்துகளும், 2020-ஆம் ஆண்டு 1,16,496 சாலை விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் அதிக விபத்துகள் ஏற்படும் 748 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 19,583 (2018), 17,633 (2019) மற்றும் 15,269 (2020) சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. புதுச்சேரியில் 771 (2018), 653 (2019) மற்றும் 567 (2020) சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.

வாகனக் கழிவுக் கொள்கை:

பழைய மற்றும் மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளையாத வகையில் வாகனக் கழிவுக் கொள்கை அமைந்துள்ளது. வாகனம் மற்றும் அது சாா்ந்த துறைகளில் அதிக வளா்ச்சிக்கு இந்தக் கொள்கை வித்திடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எஃகு தொழில்துறையில் அரிய உலோகங்களின் பயன்பாட்டையும் இது உறுதி செய்யும். வாகனக் கழிவு சூழலியல் வளா்ச்சி அடைந்ததும் அதிக வேலை வாய்ப்பையும் வாகனத் துறையில் அதிக வளா்ச்சியையும் இந்தக் கொள்கை ஏற்படுத்தும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com