தில்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சந்திக்கவுள்ளார்.
கர்நாடகத்தின் புதிய முதல்வராக புதன்கிழமை பசவராஜ் பதவியேற்ற நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின்போது, மத்திய உள்துறை அமித் ஷா, பாஜகவின் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரையும் பசவராஜ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு
இந்நிலையில் கரோனா பரவல் குறித்து தில்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ், “கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தின் மூன்று மாவட்டங்களில் கேரள எல்லை உள்ளது. அந்த மாவட்ட அதிகாரிகளிடம் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், கேரளத்திலிருந்து உரிய பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.”
பாஜகவில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முக்கிய பொறுப்புகளில் பதவி வகிக்க கூடாது என்ற விதிமுறை உள்ளதால் கடந்த திங்கள்கிழமை எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.