தேர்தலை மனதில் வைத்தே மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
இதையும் படிக்க | ஜப்பானில் மேலும் 4 நகரங்களில் கரோனா அவசரநிலை அறிவிப்பு
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதி, மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள 27 சதவிகித இடஒதுக்கீடானது கால தாமதமானது எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பகுஜன் சமாஜ் கட்சி அரசுப் பணிகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. இது துரதிருஷ்டவசமானது. தேர்தலை மனதில் கொண்டே இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.