கண்ணூர்: புகை பிடிக்கும் நபர்களுக்கு புற்றுநோய் ஏற்படும், இதய நோய் ஏற்படும் ஆபத்து மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படும் என்பது ஏற்கெனவே அச்சமூட்டும் தகவல்கள்தான். தற்போது குறிப்பாக மணமாகாத புகை பிடிக்கும் இளைஞர்களுக்கு மேலுமொரு சிக்கலும் ஏற்பட்டுள்ளது.
புகை பிடிப்பதை ஒழிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், புதிய வகையில் கேரளத்தில் கல்லூரி பெண்கள் ஒரு சபதம் மேற்கொண்டுள்ளனர்.
அதாவது, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளில் பயிலும் 220 கல்லூரி மாணவிகள், புகை பிடிக்கும் பழக்கமுள்ள இளைஞர்களைத் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர்.
மலபார் புற்றுநோய் அமைப்பு சார்பில், புகையிலை ஒழிப்பு நாளை முன்னிட்டு, இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளதோடு, மிகச் சிறந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும் மாறியுள்ளது.