சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியரும் அவரது தந்தையும் கரோனாவால் உயிரிழக்க, உறவினர்கள் யாரும் முன்வராததால், அவர்களது பள்ளித் தோழர்கள் இருவருக்கும் இறுதிச் சடங்கினை செய்துள்ளனர்.
பவன் குமார் (45), சென்னையில் பணியாற்றி வந்த அவர், சமீபத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆந்திரத்தில் உள்ள சூலூர்பேட்டையில் தனது தந்தையுடன் சென்று வசித்து வந்துள்ளார். தந்தை சுதாகர் பிரசாத் ஓய்வு பெற்ற இஸ்ரோ ஊழியராவார். மகளுக்கு உதவ பவன்குமாரின் மாமியாரும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், குழந்தை தவிர பெரியவர்கள் நான்கு பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பவன் குமாரின் மனைவி மற்றும் மாமியார் உடல் நலம் தேறிய நிலையில், பவன் குமார் மற்றும் சுதாகர் பிரசாத்தின் உடல்நிலைகள் மோசமடைந்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பவன்குமாரின் தந்தை சுதாகர் மே 18-ஆம் தேதி உயிரிழக்க, மே 30-ஆம் தேதி பவன்குமார் உயிரிழந்தார்.
இருவரது உடலையும் பெற்று அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராததால், பவன் குமாருடன் பள்ளியில் ஒன்றாகப் பிடித்த பிரபாகர் மற்றும் சுப்பராகவலு ஆகியோர் இருவருக்கும் இறுதிச் சடங்குகளை செய்து வைத்தனர். நாங்கள் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள். இன்று அவர்களுக்கு மரியாதையான முறையில் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காக நாங்களாக முன்வந்து மருத்துவமனையிலிருந்து உடல்களைப் பெற்று இறுதிச் சடங்குகளை செய்தோம் என்கிறார்கள்.