புது தில்லி: புது தில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்குப் பின், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
மருத்துவமனைகள் தரப்பில் அளிக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, கடந்த திங்கள்கிழமை, தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 200-க்கும் குறைவான கரோனா நோயாளிகள்தான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மே 14-ஆம் தேதி முதலே, மருத்துவமனைகளில் நாள்தோறும் கரோனா பாதித்து அனுமதிக்கப்படும் நோயாளிகளை விடவும், கரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
நாள்தோறும் புதிதாக கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்தது போல, கரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில் முறையே 228 மற்றும் 237 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதே நாள்களில் முறையே 619 மற்றும் 425 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
மே 16-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து தற்போது அது 200க்கும் குறைவாக மாறியுள்ளது.