மத்திய அரசு இலவசமாக கரோனா தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் புதன்கிழமை சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை முன்வைத்தார். இதையடுத்து பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோன்று மற்ற மாநிலங்களும் மத்திய அரசு இலவச தடுப்பூசி தர வலியுறுத்துமாறு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.