ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி இறந்துவிட்டதாகக் கூறி, உடலையும் எரியூட்டிவிட்ட நிலையில், அவர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தை வெறும் அதிர்ச்சிச் சம்பவம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. உண்மையில் நம்பவே முடியாத சம்பவமாக அமைந்துவிட்டது அப்பகுதி மக்களுக்கு.
கிறிஸ்டியன்பெட் பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜாம்மா. கரோனா பாதித்து மே 12-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் யாரும் தங்க அனுமதிக்கப்படாத நிலையில், மூன்று நாள்களுக்குப் பின் அவரைப் பார்க்கச் சென்றார் கணவர். அவர் அனுமதிக்கப்பட்ட படுக்கை காலியாக இருந்ததைப் பார்த்த அவரது கணவர் கட்டய்யா, மருத்துவர்களிடம் கேட்டுள்ளார்.
அவர்களுக்கு தகவல் தெரியாததால் மருத்துவமனை முழுவதும் தேடியுள்ளனர்.
அப்போது, பிணவறையில் சென்று பார்த்தபோது, அவரது மனைவியைப் போன்று ஒரு உடலை கட்டயா பார்த்துள்ளார். உடனடியாக கிரிஜம்மா இறந்ததாகக் கூறி இறப்புச் சான்றிதழுடன் உடலையும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.
கிரிஜம்மாவின் உடல் என்று நினைத்து, அந்த உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதேவேளையில், அவரது மகனும் கரோனாவுக்கு பலியானதால், இருவருக்கும் குடும்பத்தினர் இறுதிச் சடங்கு, பூஜைகளை செய்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் பூரண நலம் பெற்ற கிரிஜம்மா, வீட்டுக்குத் திரும்பிவந்துள்ளார். அவரைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே போயினர். பிறகுதான் அவர்கள் வேறொரு உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தது தெரிய வந்தது.