பெங்களூரு: எஸ்எஸ்எல்சி அல்லது 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அதேவேளையில், பியூசி எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கு முந்தைய இரண்டாம் ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் இந்த ஆண்டு பியூசி தேர்வுகள் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று கர்நாடக துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வி அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது பியூசி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்குச் செல்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் எஸ்எஸ்எல்சி அல்லது 10ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவது என்று அரசு முடிவு செய்துள்ளது. இது ஜூலை மாதம் மூன்றாவது வாரம் நடத்தப்படும். அறிவியல், கணிதம், சமுக அறிவியல் மற்றும் மொழித் தேர்வுகளுக்கு விடையைத் தேர்வு செய்யும் வகையில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.