புது தில்லி: ஏற்கனவே ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவற்றில் பெட்ரோல் விலை ஏற்கனவே லிட்டருக்கு ரூ.100ஐ எட்டிவிட்ட நிலையில், இன்று லே மற்றும் ஆந்திரம், தெலங்கானாவின் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டிவிட்டது.
கடந்த மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலைகள் 18 முறை உயா்த்தப்பட்டுள்ளது.
இன்று பெட்ரோல் விலை 27 காசும், டீசல் விலை 28 காசும் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.76 ஆகவும், டீசல் ரூ.85.66 ஆகவும் உள்ளது.
மாநில அரசுகள் விதிக்கும் வாட் மற்றும் போக்குவரத்துச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடுகிறது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் வாட் வரி உள்ளதால் அங்கு பெட்ரோல் விலை ஏற்கனவே ரூ. 100-ஐ கடந்துவிட்டது. அடுத்ததாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் அதிக வரி விதிக்கின்றன.
இந்த நிலையில், தற்போது ஆந்திரம், தெலங்கானா, லேவிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 ஐ எட்டிவிட்டது.